Sunday, January 13, 2008

திருப்பாவை # 30



ஸ்ரீ:






வங்கக் கடல் கடைந்த மாதவனைக் கேசவனை
திங்கள் திருமுகத்து சேயிழையார் சென்றிறைஞ்சி
அங்கப் பறைகொண்ட ஆற்றை அணிபுதுவை
பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன
சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே
இங்குஇப் பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைத் தோள்
செங்கண் திருமுகத்து செல்வத்திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவ ரெம்பாவாய்!

பொருள்:பாற்கடலைக் கடைந்து அமுதளித்த மாலவனை, மாதவனை, கேசவனை, கோபாலனை, நிலவொத்த அழகு முக கோபியர்கள், அணி சூடிய அரிவையர்கள், மார்கழி நோன்பு முடித்து சென்று அந்த பெருமான் அருள் பெற்ற வரலாற்றை "சூடிக் கொடுத்த சுடர்க் கொடியாள்" பாடியருளினாள்.


மாலை சூடிய ஸ்ரீ வில்லிபுத்தூர் பட்டர் பிரானின் திருமகளாம் கோதை பாடிய இந்த தூயதமிழ் பாசுரங்கள் முப்பதையும் தவறாமல் நாளும் சேவிப்பவர்கள், மலையன்ன தோளன், செந்தாமரைக் கண்ணன், செல்வக் கோமான் கோவிந்தன் அருள் பெற்று அளவிலா ஆனந்தமும் அடைவர்.


கூர்ம அவதாரம்

நாம் எல்லோரும் உய்ய எம்பெருமான் எடுத்த அவதாரங்கள் பத்து அவற்றில் இரண்டாவது அவதாரமான கூர்ம அவதாரத்தை இந்த பாசுரத்தில் பாடியுள்ளார் சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள். தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையே அடிக்கடி போர் நடந்து கொண்டிருந்தது. அதனால் தங்கள் குலம் அழிந்துவிடுமோ என்று கவலைப்பட்ட தேவர்கள் தங்கள் குறையை பிரம்ம தேவரிடம் சென்று முறையிட்டனர், அவரும் தேவர்களை திருமாலிடம் அழைத்துச் சென்றார். பாற்கடலைக் கடைந்து அதிலிருந்து வரும் அமிர்தத்தை உண்டால் மரணமில்லா பெருவாழ்வு எய்தலாம் என்று மாலவன் கூறினார். தேவர்கள் மட்டும் பாற்க்கடலைக் கடைவது கடினம் என்பதால் அசுரர்களையும் இதில் கலந்து கொள்ளச் செய்ய முதிவு செய்யப்பட்டது. மந்தார மலையை மத்தாக்கவும், வாசுகி என்னும் நாகத்தை கயிறாகவும் கொண்டு பாற்கடலைக் கடைய முடிவு செய்யப்பட்டது. திருமால தந்திரமாக தேவர்களை வால் பக்கமும், அசுரர்களை தலைப்பக்கமுமாக இருந்து கடையச்செய்தார். இவ்வாறு பாற்கடலைக் கடைந்த போது திருமால் ஆமை வடிவம் எடுத்து மந்தார மலையைத் தாங்கினார் என்பது புராண வரலாறு.

தேவரும் அசுரரும் பாற்கடல் கடைந்த போது முதலில் கடலில் இருந்து ஆலம் என்னும் விஷம் வந்தது, வலி தாங்காமல் வாசுகியும் விஷத்தைக் கக்கியது. இரண்டும் சேர்ந்து ஆலாலமாகி உலகம் முழுவதையும் சூழ்ந்து, தேவர்கள் அனைவரும் பயந்து ஓடினர். அந்த ஆலகால விஷத்தை சிவபெருமான் உண்டு அவர் கழுத்திலே தாங்கி தேவர்கள் முதல் அனைத்து ஜீவ ராசிகளையும் காத்தார். பாற்கடலிலிருந்து வெளிப்பட்ட திருமகளை மஹா விஷ்ணு ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து வெளிப்பட்ட ஐராவதம், காமதேனு, கற்பகத்தரு, சிந்தாமணி,கௌஸ்துபமணி, சூடாமணி, உச்சைர்வம் என்னுன் குதிரை ஆகியவற்றை இந்திராதி தேவர்கள் ஏற்றுக் கொண்டனர். இறுதியாக அமுதம் வெளி வந்தது மஹா விஷ்ணு, தன்வந்திரி வடிவில் ஏந்தி வந்தார். தேவரும், அசுரரும் அமுதம் முதலில் பெற குழப்பம் விளைவித்தனர், மோகினி வடிவம் எடுத்து, அசுரர்களை மயக்கி தேவர்களுக்கு அமிர்தம் அளித்தார் திருமால். இவ்வரலாற்றை இந்த நிறைவுப் பாசுரத்தில் "வங்கக் கடல் கடைந்த மாதவனை கேசவனை " என்று பாடுகின்றார் ஆண்டாள்.


"கோதை சொன்ன சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமல் பாடி நோன்பு நோற்பவர்கள் , திருமாலின் திருவருள் பெறுவர் என்று நூலின் ப்லனையும், நோன்பின் பயனையும் ஒருங்கே உணர்த்துவது போல், திருமால வங்கக் கடல் கடைந்து திருமகளைப் பெற்ற வரலாற்றுடன் திருப்பாவையை நிறைவு செய்கிறார் ஆண்டாள்.

ஆண்டாள் திருவடிகளே சரணம்திருப்பாவை முற்றும்


திருப்பாவை தனியன்கள்


கோதை பிறந்தவூர் கோவிந்தன் வாழுமூர்
சோதி மணிமாடந் தோன்றுமூர்
நீதியால் நல்லபத்தர் வாழுமூர் நான்மறைகளோதுமூர்
வில்லிபுத்தூர் வேதக் கோனூர்.


பாதகங்கள் தீர்க்கும் பரமனடி காட்டும்
வேதமனைத்திற்கும் வித்தாகும் கோதை தமிழ்
ஐயைந்துமைந்தும் அறியாத மானிடரை
வையம் சுமப்பது வம்பு.


திருவாடிப்பூரத்து செகத்துதித்தாள் வாழியே 
திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே
பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை வாழியே
பெரும்பூதூர் மாமுனிக்கு பின்னானாள் வாழியே
ஒரு நூற்று நாற்பத்துமூன்றுரைத்தால் வாழியே
உயர் அரங்கற்கே கண்ணி யுகந்தளித்தாள் வாழியே
மருவாரும் திருமல்லிவள நாடி வாழியே
வண்புதுவை நகர் கோதை மலர்ப்பதங்கள் வாழியே


மாதங்களில் சிறந்த மார்கழியின் முப்பது பாசுரங்களையும்  வந்து வாசித்து இன்புற்ற அனைத்து அன்பர்களுக்கும் நன்றி. குறையேதும் இருந்தால் அது அடியேனுடையது நிறைகள் அனைத்தும் ஆண்டாள் திருவடிகளில் சமர்ப்பணம்.

Labels: , ,

திருப்பாவை # 29 (பரிபூர்ண சரணாகதி)

ஸ்ரீ:




சிற்றஞ் சிறுகாலே வந்துன்னை சேவித்துஉன்
பொற்றா மரையடியே போற்றும் பொருள் கேளாய்

பெற்றம்மேய்த் துண்ணும் குலத்தில் பிறந்து நீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது
இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா!
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு
உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்
மற்றைநம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்.............(29)


பொருள்:கோவிந்தா! விடியற்காலை வேளையில் வந்து உன்னை வணங்கி உன் பொற்பாதங்களை போற்றிப் பாடும் காரணத்தைக் கூறுகிறோம் கேட்டருள்க.

பசுக்களை மேய்க்கும் இடையர்கள் குலத்தில் பிறந்த நீ உன்னைச் சரணடைந்த உன் அடியவர்களை அடிமைகளாக ஏற்றுக் கொள்ளாமலிருப்பது தகுதியாகாது.

இன்று மட்டுமல்ல( இப்பிறவி) என்னும் எத்தனை ஜென்மம் நாங்கள் எடுத்தாலும் உன்னோடு கூடியிருப்போம், உனக்கே அடிமைகளாகி சேவை செய்வோம். மற்ற எந்த விருப்பங்களும் மனத்தில் எழாமல் ஆட்கொண்டு அருள் பரந்தாமா!


கோவிந்தன்: மாடு மேய்த்து அதனாற் கிடைக்கும் வருவாயைக் கொண்டு வாழும் கோபாலர் சாதியிற் பிறந்தவன் கண்ணன் என்பதை"பெற்றம் மேய்த்துண்ணும் குலத்திற் பிறந்து நீ" என்னும் வரிகளில் உணர்த்துகின்றார் ஆண்டாள். ஆநிரைகள் ஆயர்களின் செல்வமாக விளங்குபவை; அவற்றைக் கவர்ந்து செல்ல வரும் பகைவர்களை எதிர்த்து நின்று அவர் தம் வலிமையை அழிக்கின்ற கோவிந்தன் என்பதை கூடாரை வெல்லுஞ் சீர் கோவிந்தா என்றும் மாற்றாரை மாற்றழிக்க வல்லானை என்னும் இரண்டு பாடல்களில் உணர்த்தியுள்ளார் ஆண்டாள்.

திரௌபதி  நிர்க்கதியாக கௌரவர் சபையில் தவித்தபோது அவளைக் காத்த இந்த "கோவிந்தன்" என்ற திருநாமத்தை 27ல் கூடாரை வெல்லும் கோவிந்தா, 28ல் குறையொன்றும் இல்லாத கோவிந்தா, 29ல் கோவிந்தா என்று அடுத்தடுத்த மூன்று பாசுரங்களில் போற்றியுள்ளார் சூடிக் கொடுத்த சுடர்க் கொடியாள்.


பூரண சரணாகதி தத்துவத்தை , திருப்பாவையின் சாரத்தை விளக்கும் பாசுரம்.

Labels: , , ,

Saturday, January 12, 2008

திருப்பாவை # 28

ஸ்ரீ:


குறையொன்றும் இல்லாத கோவிந்தன்



கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம்
அறிவொன்று மில்லாத ஆய்குலத்து உன்தன்னை
பிறவிப் பெருந்துணை புண்ணியம் யாமுடையோம்;
குறைவொன்று மில்லாத கோவிந்தா! உன்தன்னோடு
உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னைச்
சிறுபே ரழைத்தனவும் சீறியருளாதே;
இறைவா! நீ தாராய் பறையேலோ ரெம்பாவாய். (28)



பொருள்: இறைவா! உன் அடிமைகளாகிய நாங்கள் இடையர்கள்! கன்று பசுக்களுடன் காட்டிற்கு சென்று அவைகளை மேய்ப்பவர்கள், அதில் களிப்புறும் அறிவற்றவர்கள். அப்படிப்பட்ட ஆய்குலத்தில் எங்களுடன் நீ பிறந்திருப்பதனால் நாங்கள் பெரும் புண்ணியம் செய்திருக்கின்றோம்.

"ஸ்ரீ:ப்பதியாய் விள்ங்குவதால் "குறையொன்றும் இல்லாத ஸ்ரீ கோவிந்தா" உன்னுடன் உண்டான இந்த உறவு இனி ஒரு பொழுதும் மாறாது. கள்ளமற்ற காரிகைகளாகிய நாங்கள்! அன்பு மேலீட்டால் உன்னை மற்ற சிறுவர்களை அழைப்பதைப் போல் உன்னையும் அழைப்பதனால் கோபம் கொள்ளாதே அருளாளா! எங்களை காத்து எப்போதும் உன் சேவகம் செய்யும் வரம் தருவாயாக.




குறையொன்றும் இல்லாத ஸ்ரீ கோவிந்தா:

மாடு மேய்த்து அதனாற் கிடைக்கும் வருவாயைக் கொண்டு வாழும் கோபாலர் சாதியிற் வளர்ந்தவன் கண்ணன் என்பதால் கோவிந்தன் என்றும் பெரிய பிராட்டியாரையே தன் வல மார்பில் கொண்டுள்ளதால் குறைவொன்றும் இல்லாத கோவிந்தன் என்றும் பாடுகின்றார் ஆண்டாள். திருமால் திருமகளை அடைந்த கூர்ம அவதார வரலாற்றை முப்பதாம் பாசுரத்தில் காண்க.

Labels: , ,

Friday, January 11, 2008

திருப்பாவை # 27 ( கூடார வல்லி)

ஸ்ரீ:





கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா! உன்தன்னைப்
பாடிப்பறை கொண்டு யாம் பெறும் சம்மானம்
நாடுபுகழும் பரிசினால் நன்றாக
சூடகமே தோள் வளையே தோடேசெவிப் பூவே
பாடகமே யென்றனைய பல்கலனும் யாமணிவோம்
ஆடையுடுப்போம் அதன் பின்னே பாற்சோறு
மூடநெய் பெய்து முழங்கை வழிவாரக்
கூடியிருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்.   (27)



பொருள்: உன்னை கூடி மகிழாத ஒதுங்கியிருப்பவர்களையும் அன்பால் வென்று அடிமைப்படுத்தும் குணக்குன்றே கோவிந்தா!. உன் பக்தர்களிடம் தோற்றுவிடுபவனே கோவிந்தா!

இந்த பாவை நோன்பை நோற்பதால் நாங்கள் பெறும் பரிசு மிகச்சிறந்தது. உன் கருணையினால் அவனி மக்கள் போற்றும் பரிசுகள் அனைத்தும் அடைந்திடுவோம்.

நோன்பிற்காக ஒதுக்கிய அலங்காரங்கள் அனைத்தும் மேற்கொள்வோம். தலையில் சூடாமணி சூடுவோம், தோள் வளையங்கள் அணிவோம், தோடணிவோம்,கைகளில் வளையல்கள் அணிவோம், செவிப்பூவால் சிறப்போம், கால்களில் பாடகம் அணிவோம் இப்படி பல ஆபரணங்களை அணிவோம். மலர் சூடுவோம், புது பட்டாடையணிவோம்.

இவையெல்லாம் எதற்காக தெரியுமா? எம்பெருமானே! பால் சோறு பொங்கி அதில் பசு நெய் கலந்து முழங்கை வழிய வழிய "குறையொன்றும் இல்லாத கோவிந்தன்" உன்னுடன் கூடி உண்ணவே. மனம் குளிர்ந்து நீ எங்களுக்கு அந்த பாக்கியத்தை அருள்வாயாக!

கோவிந்தன்:

மாடு மேய்த்து அதனாற் கிடைக்கும் வருவாயைக் கொண்டு வாழும் கோபாலர் சாதியிற் பிறந்தவன் கண்ணன் என்பதை "பெற்றம் மேய்த்துண்ணும் குலத்திற் பிறந்து நீ" (பா. 29 ) என்னும் வரிகளில் உணர்த்துகின்றார் ஆண்டாள். ஆரைகள் ஆயர்களின் செல்வமாக விளங்குபவை; அவற்றைக் கவர்ந்து செல்ல வரும் பகைவர்களை எதிர்த்து நின்று அவர் தம் வலிமையை அழிக்கின்ற கோவிந்தன் என்பதை "கூடாரை வெல்லுஞ்சீர் கோவிந்தா" என்னும் இப்பாசுரத்தின் வரிகளாலும் மாற்றாரை மாற்றழிக்க வல்லானை (பா.15 ) என்னும் இரண்டு பாசுரங்களில் உணர்த்தியுள்ளார் ஆண்டாள்.



இன்றைய தினம் "கூடார வல்லி" தன்னை கோபிகையாக பாவித்து கண்ணனை வேண்டி மற்ற கோபிகையர்களுடன் மாதம் முழுவதும் நோன்பிருந்த ஆண்டாள் அந்த குறை ஒன்றும் இல்லாத  கோவிந்தனுடன் கூடிய நாள்.

Labels: , ,

Thursday, January 10, 2008

திருப்பாவை # 26

ஸ்ரீ:



மாலே! மணிவண்ணா! மார்கழி நீராடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தையெல்லாம் நடுங்க முரல்வன
பாலன்ன வண்ணத்து உன் பாஞ்சசன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப்பாடுடையனவே
சாலப்பெரும் பறையே பல்லாண்டிசைப்பாரே
கோல விளக்கே கொடியே விதானமே
ஆலினிலையாய்! அருளேலோர் எம்பாவாய்............(26)



பொருள்: மாலவனே! கருமை நிறக் கண்ணா! மார்கழி நோன்பு நோற்று நீராட வந்த பாவையர்களுக்கு என்ன வேண்டுமென்று எடுத்துரைக்கிறோம். கேள்.

படைப்போர்புக்கு முழங்கும் உன் இடக்கையில் விளங்கும் பாஞ்சசன்னியத்தை போல் முழங்கும் சங்கம் வேண்டும். பெரும் முரசுகள் வேண்டும். உன்னைப் போற்றிப் பல்லாண்டு பாடும் கலைஞர்கள் வேண்டும். அழகிய மங்கள தீபங்கள் வேண்டும்.ஆடிப்பறக்கும் கொடிகள் வேண்டும்.பனி படாமல் எங்களைக் காக்க எங்கள் தலை மேல் கூரையும் வேண்டும்.பாலனாக ஆலிலையில் பள்ளிகொண்ட பரந்தாமா! இவற்றை எங்களுக்கு நீ அருள்வாயாக.

ஆலினிலையாய்: பிரளய காலத்தில் சகல அண்டங்களையும் தனது வயிற்றில் அடக்கி சிறு குழந்தையைப் போல ஆலிலையில் பள்ளி கொள்ளும் மாயன்


Labels: , , ,

Wednesday, January 09, 2008

திருப்பாவை # 25

ஸ்ரீ:





ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்
தரிக்கில னாகித் தான் தீங்கு நினைத்த
கருத்தைப் பிழைப்பித்த கஞ்சன் வயிற்றில்
நெருப்பென நின்ற நெடுமாலே! உன்னை
அருத்தித்து வந்தோம் பறைதருதியாகில்
திருத்தக்க செல்வமும் சேவகமும்யாம் பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்............(25)



பொருள்: வடமதுரையில் தேவகியின் மகனாகப் பிறந்து ஒரு இரவிற்குள்ளாகவே கோகுலத்தில் யசோதையின் மகனாக ஒளிந்து வளர்ந்த எம் கண்ணனே! கேடு நினைத்த கம்சனுக்கு நெருப்புப் போல இருந்தவனே! உன் அடிமைகளாகிய நாங்கள் உன்னை வேண்டி வந்துள்ளோம். எங்களுக்கு தேவயானவற்றை அளிப்பாயாக. அவ்வாறு நீ எங்களை ஆட்கொண்டால் உனக்கு சேவை செய்து உன் புகழ் பாடி வருத்தம் தீர்ந்து மகிழ்ந்து வாழ்வோம்.

தேவகி மைந்தன் யசோதையின் மகன் ஆனது:

கண்ணன் பிறப்பு, வளர்ப்பு, செயல்கள் அனைத்துமே இனியவை. அவன் தேவகியின் மகனாய் பிறந்தவன். இறைவனையே பிள்ளையாகப் பெற அவள் பெற்ற பேறு பெரியது, ஒப்பற்றது. அவள் பிள்ளை பெற்ற அந்த இரவும் ஒப்பற்றது. சீரோடும் சிறப்போடும் கொண்டாடப்படவேண்டிய கண்ணனின் பிறப்பு சிறைக்குள் நிகழ்ந்தது. கண்ணனை ஓர் இரவு கூட மதுராவில் வைத்துக் கொள்ள முடியவில்லை. இரவோடு இரவாக பால கிருஷ்ணரை நந்த குலத்திற்கு எடுத்து சென்றார் வசுதேவர்.விழித்திருந்த காவலர்கள் அனைவரும் மாயையால் உறங்கினர்; சிறைக்கதவுகள் தானாக திறந்து கொண்டன. வெள்ளம் கரை புரண்டு பய்ந்த யமுனை நதி இரண்டாகப் பிளந்து வசுதேவருக்கு பாதை அமைத்தது. மழையிலிருந்து கண்ணனைக் காப்பாற்ற ஆதி சேஷன் வந்து குடைப் பிடித்தான்.பெண் குழந்தை பெற்ற யசோதை தன் உணர்வின்றி உறங்கிக் கொண்டிருந்தாள். கண்ணனை அங்கு விட்டு, வசு தேவர் அந்த பெண் குழந்தையை எடுத்து சிறை திரும்பி வந்தார்; சிறைக்கதவுகள் பூட்டிக் கொண்டன. மாயை விலகி காவலர்கள் விழித்துக் கொண்டனர். அந்தக் குழந்தை அழுதது. குழந்தை பிறந்த செய்தி மன்னனுக்கு பறந்தது. ஆசையுடன் வரவேண்டிய தாய் மாமன் ஆயதத்துடன் வந்தான். ஈவு இரக்கமில்லாமல் பெண் குழந்தை என்றும் பாராமல் கொல்ல முற்பட்டான் . குழந்தை மாயாவாக  மாறி உன்னைக் கொல்லப்பிறந்தவன் கோகுலத்தில் உள்ளான் என்னும் உண்மையை உணர்த்தி மறைந்தது.இத்தனையும் நிகழ்ந்தது ஓர் இரவில் அந்த இரவு ஒப்பற்ற இரவு.


கண்ணனை தன் கண்ணின் மணியாக வளர்த்தாள் யசோதை. கண்ணன் ஒளிர்ந்து வளர்வதை அறிந்த கம்சன் அவனைக் கொல்ல கருதி, சகடம், கொக்கு, கன்று, குதிரை, விளாமரம், குருந்த மரம், பூதனை முதலிய பல அசுரர்களை அனுப்பினான் அனைவரும் கண்ணால் வதம் செய்யப்பட்டனர். வில் விழாவிற்கு கண்ணனையும், பலராமரையும் அழைத்து, மல்லர்களையும், குவலயாபீடத்தியும் ஏவி கொல்ல முயற்சி செய்தான் அதுவும் வீணானது. இவ்வாறு கம்சனைன் அனைத்து செயல்களையும் முறியடித்து அவனையும் கண்ணன் வதம் செய்து அவன் வயிற்றில் நெருப்பாக நின்றான் என்பதை  பட்டர் பிரான் கோதை

"ஒருத்தி மகனாய் பிறந்து ஓரிரவில்ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்தரிக்கிலா னாகித்தான் தீங்கு நினைத்த கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்நெருப்பென நின்ற நெடுமாலே" என்று  அழகு தமிழில் பாடுகின்றார் இப்பாசுரத்தில்.

Labels: , ,

Tuesday, January 08, 2008

திருப்பாவை # 24

ஸ்ரீ:



அன்றிவ்வுலகமளந்தாய்! அடிபோற்றி
சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய்! திறல் போற்றி
பொன்றச்சகடமுடைத்தாய்! புகழ் போற்றி
கன்று குணிலாவெறிந்தாய்! கழல் போற்றி
குன்று குடையாவெடுத்தாய்! குணம் போற்றி
வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி
என்றென்று உன் சேவகமே ஏத்திப் பறைகொள்வான்
இன்றுயாம் வந்தோம்; இரங்கேலோர் எம்பாவாய். (24)

பொருள்:'
திரிவிக்கிரமனாக மூன்று அடிகளால் மூவுலகங்களையும் அளந்த திருவடியை போற்றி வணங்குகின்றோம். இலங்கையை அழித்த உனது திறமையைப் போற்றுகின்றோம். மாய வடிவில் வந்த சகடாசுரனை உதைத்து மாய்த்து உனது புகழைப் போற்றுகின்றோம். கன்றில் உருவத்தில் வந்த வத்ராசுரனை எறிந்து விளங்கனி விழ வைத்த உனது திறத்தைப் போற்றுகின்றோம். ஆயர்களையும், ஆநிரைகளையும் காப்பாற்ற கோவர்த்தன மலையை குடையாகப் பிடித்த உன் கருணை குணத்தைப் போற்றுகின்றோம். பகைவர்களை அழிக்க உன் கையில் விளங்கும் உனது திவ்ய ஆயுதங்களை வணங்குகின்றோம். என்றென்றும் உனக்கு அடிமையாக இருந்து உன் சேவை புறப்பட்டு இன்று வந்தோம் எங்களுக்கு இரங்கி அருள் புரிவாயா! மதுசூதனா!


புராண வரலாறுகள்:

அன்றிவுலகமளந்தவன்: வாமன அவதாரத்தின் பெருமையே இப்பாசுரத்திலும் "அன்றிவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி " என்னும் பாசுர வரிகளால் உணர்த்துகின்றார் ஆண்டாள் நாச்சியார். பார்க்க மூன்றாவது பாசுரம்.

சென்றங்கு தென்னிலங்கை செற்றவன்: மேலும் நாங்கள் தேடி வந்த இந்த திருவடிகள் முன்பு சீதா தேவியார் பொருட்டு, தென்னிலங்கை சென்று இராவணனை அழித்து அந்நகரை தீக்கு இரை ஆக்கிய திருவடிகள் என்னும் இராமாவதாரப் பெருமையும் "சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல் போற்றி" என்று போற்றுகின்றார் ஆண்டாள்.


பொன்றச் சகடம் உதைத்தவன்: கஞ்சனால் ஏவப்பட்ட வஞ்சப் பேய் மகள் கண்ணன் கையால் மாண்டதால் கோபம் கொண்ட அவன் மற்றொரு அசுரனை அனுப்பினான் கண்ணனைக் கொல்ல. அவனும் சகட(சக்கர) வடிவம் எடுத்து கண்ணனை ஏற்றிக் கொல்ல உருண்டு வந்தான் அதனை அறிந்த கண்ணன் தனது பிஞ்சுக் கால்களால் அவனை உதைத்து அவனை வதம் செய்தார். இந்த வரலாற்றையே சூடிக் கொடுத்த சுடர்க் கொடியாள் "பொன்றச் சகடம் உதைத்தாய்! புகழ் போற்றி!" என்று மங்களாசாசனம் செய்கிறாள்.


கன்று குணிலாய் எறிந்தவன்:
கண்ணனாகிய குழந்தையைக் கொல்ல கம்சனால் ஏவப்பட்ட அசுரர்கள் ஒவ்வொருவராக வந்து மாண்டதால், பின் இரண்டிரண்டாக வரத் தலைப்பட்டனர். கபித்தாசுரன், வத்ராசுரன் என்னும் இரு அரக்கர்கள் இவ்வாறு திட்டம் போட்டு வந்தனர். கபித்தாசுரன் விளா மரமாக நிற்க, கன்றுக் குட்டி போல வத்ராசுரன் உருவெடுத்து சென்று கண்ணனை போக்குக் காட்டி விளா மரத்திற்கு அருகில் வரச் செய்து, வேரோடு கண்ணன் மேல் சாய்ந்து அவரைக் கொல்ல திட்டம் தீட்டி வந்தனர். எல்லாம் அறிந்த மாய க்கண்ணன், மரம் அருகில் வந்து, கோபாலர்கள் விளாம் பழத்தைக் குறி வைத்து அடிக்க சிறு தடியை உபயோகிப்பது போல, கன்று போல வந்த அசுரனை தடியாக மாற்றி விளா மரத்தின் மேல் எறிந்து இருவரையும் வதம் செய்தார் என்ற புராண வரலாற்றை, "கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி" என்னும் பாசுர வரியில் எடுத்துக் காட்டுகின்றார் கோதை ஆண்டாள்.


குன்று குடையாய் எடுத்தவன்: திருவாய்ப்பாடியில் ஆயர்கள் எல்லாரும் கூடி மழையின் பொருட்டு, இந்திரனை வழிபட வழக்கபடி சமைத்தனர்; சமைத்த அச்சோற்றைக் கண்ணபிரான், இந்திரனுக்கு இடாதபடி விலக்கிக் கோவர்த்தன மலைக்கு இடச்சொல்லித் தானே ஒரு தெய்வ வடிவு கொண்டு அமுது செய்தருளினார். இதனையறிந்த இந்திரன் கோபங்கொண்டு, பல மேகங்களை ஏவிக் கண்ணன் விரும்பி மேய்க்கின்ற கன்றுகளுக்கும், பசுக்களுக்கும், இடையருக்கும், இடைச்சியர்களுக்கும் தீங்கு தரும்படி கல்மழையை ஏழு நாட்கள் இடைவிடாது பெய்வித்தான். அப்பொழுது, கண்ணன் கோவர்த்தனம் என்னும் அம்மலையை எடுத்துக் குடையாகப் பிடித்து மழையைத் தடுத்து எல்லா உயிர்களையும் காத்தருளினார். அக்கருணையை னைத்து போற்றுகின்ற'ர் ஆண்டாள்"குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி என்ற இப்பாசுர வரிகளால்.


Labels: , ,

Monday, January 07, 2008

திருப்பாவை # 23

ஸ்ரீ:



மாரி முலைமுழஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்று தீவிழித்து
வேரி மயிர்பொங்க எப்பாடும் பேர்ந்துதறி
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்
போதருமாப் போலேநீ பூவைப் பூவண்ணா! உன்
கோயில்நின்று இங்ஙனே போந்தருளிக் கோப்புடைய
சீரியசிங்கா சனத்திருந்த யாம் வந்த
காரியம் ஆராய்ந் தருளேலோ ரெம்பாவாய்.  (23)


பொருள்:
மழைக் காலத்தில் மலைக்குகையில் அயர்ந்து உறங்கும் அபார சிங்கமானது, உறக்கம் களைந்து, அக்கினி பறக்கும் கண்களை அகல விரித்து, பிடரியை சிலிர்த்து, உடல் உதறி, சோம்பல் தொலைத்து நெஞ்சு நிமிர்த்தி, நீண்ட கர்ஜனை புரிந்து கம்பீரமாக புறப்படுவது போல்

காயா மலர் போல் கருமை நிறக் கண்ணா!நீயும் எழுந்து வந்து இவ்விடம் அடைந்து இந்த அழகிய சிங்காதனத்தில் அமர்ந்து திருவோலக்கம் அருளி, நாங்கள் வந்த காரியத்தை விசாரித்து அறிந்து எங்களுக்கு அருள்வாயா! ஏ மாதவா!

கூடாதவர்களுக்கு சிங்கமாக விளங்கும் கண்ணன் தனது அடியவர்களுக்கு பூவைப் பூ வண்ணனாக விளங்கும் நயத்தையும்,  தன் காரியத்தை எல்லாம் ஆராய்ந்து பக்தர்களுக்கு அருளும் திறத்தையும்  பாடுகின்றார் ஆண்டாள் நாச்சியார் இப்பாசுரத்தில்.

Labels: , ,

Sunday, January 06, 2008

திருப்பாவை # 22

ஸ்ரீ:





அங்கண் மாஞாலத்தரசர் அபிமான
பங்கமாய் வந்துநின் பள்ளிக்கட் டிற்கீழே
சங்கமிருப்பார் போல் வந்து தலைப் பெய்தோம்;
கிங்கிணி வாய்ச்செய்த தாமரைப் பூப்போலே
செங்கண் சிறுச்சிறிதே எம்மேல் விழியாவோ?
திங்களும் ஆதித் தியனும் எழுந்தாற் போல்
அங்கண் இரண்டுங் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்
எங்கள் மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய் ................(22)


பொருள்:
பெருமாளே! உன்னிடம் தோல்வியடைந்த அகிலத்து அரசர்கள் எல்லாம் தத்தம் ஆணவம் தொலைத்து உன் பஞ்சனைக்கு பக்கத்தில் வந்து உன்னடியில் காத்து நிற்கின்றனர். அது போல நாங்களும் உன்னைச் சரணடைந்து நீ கண் விழிப்பதற்காக வந்து நிற்கின்றோம்.

சலங்கை போன்று சற்றே வாய் பிளந்த வரதா! செந்தாமரை கண்களால் எங்களை பார்த்தும் பாராமல் சிறிது சிறிதாக விழித்துப் பாரேன்.

அவ்வாறு சூரிய சந்திரர்கள் போன்ற இரு விழிகளால் நீ எங்களை நோக்குவாயே ஆனால் எங்கள் பாவங்கள் அனைத்தும் அகலும். அருளாளா!

Labels: , ,

Saturday, January 05, 2008

திருப்பாவை # 21

ஸ்ரீ:




ஏற்றக் கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப
மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள்
ஆற்றப்படைத்தான் மகனே! அறிவுறாய்
ஊற்றமுடையாய்! பெரியாய்! உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே! துயிலெழாய்
மாற்றாருனக்கு வலிதொலைந்துன் வாசற்கண்
ஆற்றாது வந்து அடிபணியுமா போலே
போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய்...............(21)



பொருள்: பாத்திரங்கள் எல்லாம் பொங்கி பெருகி வழியுமாறு பாலைப் பொழிகின்ற வள்ளல் தன்மை பொருந்திய பசுக்களை உடைய நந்தகோபனின் திருமகனே கண்ணா! எழுந்திரு.

உன்னை அண்டியவர்களை காப்பவனே! எல்லாருக்கும் தலைவனே! ஒளிச்சுடராய் உலகமெங்கும் நிறைந்தவனே எழுந்திராய்!

பகைவர்கள் எல்லாரும் உன்னிடம் தோற்று, தங்களுடைய வலிமையெல்லாம் இழந்து, வேறு வழி இல்லாமல் உன் வாசல் தேடி வந்து உனது பொற் திருவடிகளில் விழுந்து சரணடைவது போல நாங்களும் உன் வாசலில் வந்து நின்று உன் புகழ் பாடுகின்றோம், நீ மகிழ்ந்து எழுந்து வந்து அருள்வாயாக!

Labels: , ,

Friday, January 04, 2008

திருப்பாவை # 20

ஸ்ரீ:

ஸ்ரீ ஆண்டாள் சத்ய நாராயணப் பெருமாள் சேர்த்தி

முப்பத்துமூவர் அமரற்கு முன்சென்று
கப்பங்தவிர்க்குங் கலியே! துயிலெழாய்
செப்பமுடையாய்! திறலுடையாய்! செற்றார்க்கு
வெப்பங் கொடுக்கும் விமலா! துயிலெழாய்
செப்பென்ன மென்முலை செவ்வாய் சிறுமருங்குல்
நப்பின்னை நங்காய்! திருவே! துயிலெழாய்
உக்கமும் தட்டொளியும் தந்துஉன் மணாளனை
இப்போதே எம்மை நீராட்டேலோர் எம்பாவாய்..........(20)



பொருள்: முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும் தானே முன் சென்று அவர்களின் இடரை களையும் கண்ணா எழுந்திரு, நேர்மையானவனே! திறமையானவனே! பகைவரைப் பந்தாடும் பரந்தாமா! துயிலெழாய்.

( முப்பத்து மூவர் - பன்னிரண்டு சூரியர்கள், பதினோறு உருத்திரர்கள், அஷ்ட வசுக்கள், இரண்டு அக்னிகள் ஆகியோர் என்பாரும் உண்டு)

பொற்கலசம் போன்ற மெல்லிய மார்பகங்களையும், சிவந்த வாயையும் கொடி போன்ற மெல்லிய இடையையும் உடைய நப்பின்னை நங்கையே! திருமகளே! நீயும் துயிலெழாய்.

எங்கள் நோன்பிற்க்கு தேவையான விசிறியும் கண்ணாடியும் அளித்து உன் கணவனை மலர் கண்ணனை எங்களுடன் நீராட்ட அனுப்பு தாயே!


கண்ணாடி மற்றும் விசிறி கேட்பதின் உள்ளார்த்தம் - விசிறி என்பது மனதிலும், உடலிலும் உள்ள மாசை விசிறியபடி அகற்றவும், அவ்வாறு சுத்தப்படுத்தப்பட்ட ஆத்ம ஸ்வரூபம் பார்க்க கண்ணாடியும் என்று கொள்ளலாம். மனித ரீதியாக நீராடிய பிறகு கண்ணாடி பார்த்துக் கொண்டு விசிறி கொண்டு கூந்தலை காய வைப்பதற்காக கேட்டதாகவும் கொள்ளலாம்.

நப்பின்னை பிராட்டியாருக்காக கண்ணன் யாவராலும் அடக்க முடியாத ஏழு காளைகளை அடக்கி அவரைக் கைப் பிடித்தார் என்பது புராண வரலாறு.

Labels: , , ,

Thursday, January 03, 2008

திருப்பாவை #19

ஸ்ரீ:

ஆண்டாள் திருக்கல்யாணம்


குத்து விளக்கெரிய கோட்டுக்காற் கட்டில் மேல்
மெத்தென்ற பஞ்சசயனத்தின் மேலேறி
கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கை மேல்
வைத்துக் கிடந்த மலர் மார்பா! வாய் திறவாய்
மைத்தடங் கண்ணினாய்! நீ உன் மணாளனை
எத்தனை போதும் துயிலெழ வொட்டாய்காண்
எத்தனையேலும் பிரிவாற்றகில்லாயால்
தத்துவமன்று தகவேலோ ரெம்பாவாய்.
........ (19)



பொருள்: சுற்றிலும் குத்து விளக்குகள் ஒளி சிதற , யானை தந்தத்தால் செய்யப்பட்ட கால்களையுடைய சப்ர மஞ்ச கட்டிலில், மிருதுவான, வெண்மையான, குளிர்ச்சியான, வாசனை மிக்க, அழகான பஞ்சு மெத்தையில் வாசனை மிகுந்த கொத்து கொத்தான மலர்களை சூடிய நப்பின்னை பிராட்டியை அனைத்துக் கொண்டு உறங்கும் அகலகில்லேனிறையும் என்று அலர் மேல் மங்கை உறையும் மார்பா! மணிவண்ணா! கண்ணா! வாய் திறந்து பேசு.

மை எழுதிய கண்களையுடைய நப்பின்னையே! உன் கணவனின் தூக்கம் கலைந்து விடக் கூடாது என்று, உறங்கும் உன் கணவனை எழுப்ப உனக்கு மனமில்லையா? அவரை நீ சிறிது நேரம் கூட பிரிய மாட்டாயா? இது உனக்கு தகுதியன்று. அவ்வளவு தான் சொல்வோம். எங்கள் கோரிக்கையை ஏற்று கண்ணனை எழுப்பு அம்மா!


நப்பின்னை பிராட்டியாருக்காக கண்ணன் யாவராலும் அடக்க முடியாத ஏழு காளைகளை அடக்கி அவரைக் கைப் பிடித்தார் என்பது புராண வரலாறு.

Labels: , ,

Wednesday, January 02, 2008

திருப்பாவை #18

ஸ்ரீ:



உந்து மதகளிற்றன் ஓடாத தோள் வலியன்
நந்தகோ பாலன் மருமகளே! நப்பின்னாய்!
கந்தம் கமழும் குழலி! கடை திறவாய்
வந்தெங்கும் கோழி அழைத்தன காண்! மாதவிப்
பந்தல் மேல் பல்கால் குயிலினங்கள் கூவின காண்;
பந்தார் விரலி உன் மைத்துனன் பேர் பாடச்
செந்தா மரைக்கையால் சீரார் வளையொலிப்ப
வந்துதிற வாய் மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்!...........(18)


பொருள்:
ஆயர் குலத்தின் தலைவன் நந்தகோபாலன், மதம் பொழிகின்ற யானைகளையுடையவன், பகைவர்களைக் கண்டு பின் வாங்காத தோள் வலிமை கொண்டவன், அவனுடைய மருமகளே! நப்பின்னை பிராட்டியே! மணம் கமழும் கூந்தலை உடையவளே! கதவை திறவம்மா!

பொழுது விடிந்து விட்டது, பொற்கோழிகள் கூவுகின்றன, மாதவிப் கொடிகள் படர்ந்திருக்கும் பந்தலின் மேல் பல குயில்கள் கூவுகின்றன. பந்து பொருந்துகின்ற மெல்லிய காந்தள் போன்ற விரல்களையுடையவளே! உன் கணவன் கண்ணனின் புகழை உன்னுடன் சேர்ந்து நாங்களும் பாட வந்திருக்கின்றோம், தாமதம் செய்யாமல் செந்தாமரை போன்ற உன் கைகளில் அணிந்துள்ள வளையல்கள் கல கல என்று ஒலிக்கும் வண்ணம் வந்து கதவைத் திறவாயாக தாயே!

விடையேழும் அடக்கிய வரலாறு: கண்ணன் நப்பின்னைப் பிராட்டியைத் திருமணஞ் செய்து கொள்வதற்காக அவர் தந்தை குறித்தபடி, யாவருக்கும் அடங்காத ஏழு எருதுகளையும் ஏழு திருவுருவங் கொண்டு சென்று வலியடக்கித் தழுவினான் என்பது வரலாறு. சிலப்பதிகார ஆய்ச்சியர் குரவையில் ஒரு வலிமை மிக்க காளையை அடக்கி நப்பின்னை பிராட்டியை கண்ணன் மணந்த செய்தி குறிப்பிடப்படுகின்றது. நந்த கோபரின் மருமகளாக நப்பின்னைப் பிராட்டி விளங்குவதை " உந்து மதகளிற்றன் ஓடாத தோள் வலியன், நந்தகோபாலன் மருமகளே நப்பின்னாய்" என்று இப்ப்பாசுரத்தில் ஆண்டாள் நாச்சியார் பாடுகின்றார்.

Labels: , , ,

Tuesday, January 01, 2008

திருப்பாவை #17

ஸ்ரீ:



அம்பரமே,தண்ணீரே சோறே அறஞ்செய்யும்
எம்பெருமான் நந்தகோ பாலா, எழுந்திராய்;
கொம்பனார்க் கெல்லாம் கொழுந்தே! குல விளக்கே!
எம்பெருமாட்டி! யசோதாய்! அறிவுறாய்
அம்பர மூடறுத் தோங்கி உலகளந்த
உம்பர்கோ மானே! உறங்காது எழுந்திராய்!
செம்பொற் கழலடி செல்வா! பலதேவா!
உம்பியும் நீயுன் உறங்கேலோ ரெம்பாவாய்!



பொருள்: உடுக்க நல் உடை, பருகும் நீர், உண்ணும் உணவு ஆகிய அனைத்தையும் எங்களுக்கு தாராளமாக அறமாக வழங்கும் எம்பெருமானே! கண்ணனின் தந்தையே! நந்தகோபாலா! எழுந்திரு.

வஞ்சிக்கொடிக் கொடி போன்ற ஆய் குலத்து பெண்கள் அனைவருக்கும் கொழுக் கொம்பாக விளக்கும் ஒளி விளக்கே! எம்பெருமாட்டியே யசோதையே! நீயும் துயில் எழாய்!

வாமனனாக வந்து வான் வெளியையும் கடந்து திரிவிக்கிரமனாக வளர்ந்து உலகத்தை தன் திருவடியால் அளந்த தேவதேவனே! கண்ண பெருமானே துயில் கொள்ளாமல் எழுந்திரு!

செம்பொன்னாலான வீரக்கழல்களை அணிந்த செல்வா! பலதேவா! நீயும் உனது தம்பியும் உறங்காதீர்கள்.


அம்பரமூடுறுத்து ஓங்கி உலகளந்தவன்:

வாமன அவதாரத்தின் பெருமையையே இப்பாசுரத்தில் "அம்பரம் ஊடறுத்து ஓங்கி உலகளந்த உம்பர் கோமானே" என்று பாடுகிறார் ஆண்டாள் நாச்சியார்.     (பார்க்க மூன்றாம் பாசுரம்  .http://andalthiruppavai.blogspot.in/2007/12/3.html )


Labels: , ,