Friday, January 04, 2008

திருப்பாவை # 20

ஸ்ரீ:

ஸ்ரீ ஆண்டாள் சத்ய நாராயணப் பெருமாள் சேர்த்தி

முப்பத்துமூவர் அமரற்கு முன்சென்று
கப்பங்தவிர்க்குங் கலியே! துயிலெழாய்
செப்பமுடையாய்! திறலுடையாய்! செற்றார்க்கு
வெப்பங் கொடுக்கும் விமலா! துயிலெழாய்
செப்பென்ன மென்முலை செவ்வாய் சிறுமருங்குல்
நப்பின்னை நங்காய்! திருவே! துயிலெழாய்
உக்கமும் தட்டொளியும் தந்துஉன் மணாளனை
இப்போதே எம்மை நீராட்டேலோர் எம்பாவாய்..........(20)



பொருள்: முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும் தானே முன் சென்று அவர்களின் இடரை களையும் கண்ணா எழுந்திரு, நேர்மையானவனே! திறமையானவனே! பகைவரைப் பந்தாடும் பரந்தாமா! துயிலெழாய்.

( முப்பத்து மூவர் - பன்னிரண்டு சூரியர்கள், பதினோறு உருத்திரர்கள், அஷ்ட வசுக்கள், இரண்டு அக்னிகள் ஆகியோர் என்பாரும் உண்டு)

பொற்கலசம் போன்ற மெல்லிய மார்பகங்களையும், சிவந்த வாயையும் கொடி போன்ற மெல்லிய இடையையும் உடைய நப்பின்னை நங்கையே! திருமகளே! நீயும் துயிலெழாய்.

எங்கள் நோன்பிற்க்கு தேவையான விசிறியும் கண்ணாடியும் அளித்து உன் கணவனை மலர் கண்ணனை எங்களுடன் நீராட்ட அனுப்பு தாயே!


கண்ணாடி மற்றும் விசிறி கேட்பதின் உள்ளார்த்தம் - விசிறி என்பது மனதிலும், உடலிலும் உள்ள மாசை விசிறியபடி அகற்றவும், அவ்வாறு சுத்தப்படுத்தப்பட்ட ஆத்ம ஸ்வரூபம் பார்க்க கண்ணாடியும் என்று கொள்ளலாம். மனித ரீதியாக நீராடிய பிறகு கண்ணாடி பார்த்துக் கொண்டு விசிறி கொண்டு கூந்தலை காய வைப்பதற்காக கேட்டதாகவும் கொள்ளலாம்.

நப்பின்னை பிராட்டியாருக்காக கண்ணன் யாவராலும் அடக்க முடியாத ஏழு காளைகளை அடக்கி அவரைக் கைப் பிடித்தார் என்பது புராண வரலாறு.

Labels: , , ,

0 Comments:

Post a Comment

<< Home