Thursday, January 03, 2008

திருப்பாவை #19

ஸ்ரீ:

ஆண்டாள் திருக்கல்யாணம்


குத்து விளக்கெரிய கோட்டுக்காற் கட்டில் மேல்
மெத்தென்ற பஞ்சசயனத்தின் மேலேறி
கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கை மேல்
வைத்துக் கிடந்த மலர் மார்பா! வாய் திறவாய்
மைத்தடங் கண்ணினாய்! நீ உன் மணாளனை
எத்தனை போதும் துயிலெழ வொட்டாய்காண்
எத்தனையேலும் பிரிவாற்றகில்லாயால்
தத்துவமன்று தகவேலோ ரெம்பாவாய்.
........ (19)



பொருள்: சுற்றிலும் குத்து விளக்குகள் ஒளி சிதற , யானை தந்தத்தால் செய்யப்பட்ட கால்களையுடைய சப்ர மஞ்ச கட்டிலில், மிருதுவான, வெண்மையான, குளிர்ச்சியான, வாசனை மிக்க, அழகான பஞ்சு மெத்தையில் வாசனை மிகுந்த கொத்து கொத்தான மலர்களை சூடிய நப்பின்னை பிராட்டியை அனைத்துக் கொண்டு உறங்கும் அகலகில்லேனிறையும் என்று அலர் மேல் மங்கை உறையும் மார்பா! மணிவண்ணா! கண்ணா! வாய் திறந்து பேசு.

மை எழுதிய கண்களையுடைய நப்பின்னையே! உன் கணவனின் தூக்கம் கலைந்து விடக் கூடாது என்று, உறங்கும் உன் கணவனை எழுப்ப உனக்கு மனமில்லையா? அவரை நீ சிறிது நேரம் கூட பிரிய மாட்டாயா? இது உனக்கு தகுதியன்று. அவ்வளவு தான் சொல்வோம். எங்கள் கோரிக்கையை ஏற்று கண்ணனை எழுப்பு அம்மா!


நப்பின்னை பிராட்டியாருக்காக கண்ணன் யாவராலும் அடக்க முடியாத ஏழு காளைகளை அடக்கி அவரைக் கைப் பிடித்தார் என்பது புராண வரலாறு.

Labels: , ,

Wednesday, December 26, 2007

திருப்பாவை # 11

ஸ்ரீ:



கற்றுக் கறவை கணங்கள் பல கறந்து
செற்றார் திறலழிய சென்று செருச்செய்யும்
குற்றமொன்றில்லாத கோவலர் தம்பொற்கொடியே!
புற்றவல்குல் புனமயிலே! போதராய்,
சுற்றத்து தோழிமா ரெல்லாம் வந்து நின்
முற்றம் புகுந்து முகில் வண்ணன் பேர் பாட
சிற்றாதே பேசாதே செல்வப் பெண்டாட்டி நீ
எற்றுக்குறங்கும் பொருளேலோ ரெம்பாவாய்!...........(11)


பொருள்:
கோபாலர்கள், கன்றுகளையுடைய கறவைப் பசுகூட்டங்களைப் பராமரித்து பால் கறப்பர்;பகைவர்களின் வலிமை அழியும்படி போர் புரிவர்; அவர்கள் குற்றமற்றவர்கள். அவர்களது பொற் கொடி போன்ற பாவையே! புற்றில் இருக்கும் பாம்பு போன்ற அல்குலையுடையவளே! காட்டில் திரியும் மயில் போன்ற பெண்ணே! எழுந்து வாடி கண்ணே!


நம் உறவினராகிய பெண்கள் எல்லாரும் வந்து உன் வீட்டு வாசலிலே கூடி நின்று கொண்டல் வண்ணன் கோவலனாய் வெண்ணெய் உண்ட வாயன் அண்டர் கோன் அணியரங்கள்  கண்ணனின் திருநாமத்தைப் பாடுகின்றோம், செல்வப் பெண்ணே! கொஞ்சம் கூட அசையாமல், வாய் பேசாமல் எதற்காக இப்படி உறங்குகின்றாய், இந்த தூக்கத்திற்கு பொருள் தான் என்ன?

Labels: , ,

Sunday, December 23, 2007

திருப்பாவை # 8

ஸ்ரீ:





கீழ்வானம் வெள்ளன் றெருமை சிறுவீடு
மேய்வான் பரந்தன காண்! மிக்குள்ள பிள்ளைகளும்
போவான் போகின்றாரை போகாமல் காத்துன்னை
கூவுவான் வந்து நின்றோம் கோது கலமுடைய
பாவாய்! எழுந்திராய்; பாடிப் பறை கொண்டு
மாவாய்ப் பிளந்தானை மல்லரை மாட்டிய
தேவாதி தேவனை சென்று நாம் சேவித்தால்
ஆவா வென்றாராய்ந் தருளேலோ ரெம்பாவாய்! ...........(8)


பொருள்:
மனமகிழ்ச்சியுடைய பாவையே! கிழக்கே வானம் வெளுத்து விட்டது. எருமைகள் எல்லாம் சிறிது நேரத்திற்கு முன்பே விடுதலை பெற்று மேய்ச்சலுக்கு சென்று விட்டன.


பாவை நோன்பு செய்யும் இடத்திற்கு நமது தோழிமார்கள் பலர் சென்று விட்டனர். மீதமுள்ளவர்கள் அங்கு செல்லும் நோக்கத்துடன் புறப்படுகின்றனர், அவர்களை போக விடாமல் தடுத்து உன்னை அழைக்க வந்து நின்றோம். காரிகையே! காலம் தாழ்த்தாமல் எழுந்து வா!

நம் பெருமான் குதிரை வடிவம் எடுத்து வந்த மாய அசுரனை வாயைப் பிளந்து மாய்த்தவர். மதுராபுரியிலே கொடிய கஞ்சன் அனுப்பிய மல்லர்களை வீழ்த்தியவர்.

அந்த தேவர்களுக்கெல்லாம் பெரிய தேவனை, கச்சிப் பதி மேவிய களிற்றை நாம் சென்று அடைந்து பாடி, வேண்டிக் கொண்டு வணங்கினால் நம்மீது இரக்கம் காட்டி" வா! வா!" என்று அழைத்து நாம் வேண்டும் வரத்தை அருளும் வரதராஜன் அவர். எனவே விரைவில் எழுந்து வா பெண்ணே!

இப்பாசுரத்தில் அவதாரப் பெருமை:

மாவாய்ப் பிளந்தான்:

கோகுலத்தில் வளரும் கண்ணனை அழிக்க பல அசுரர்களை அனுப்பியும் அவர்களே கண்ணன் கையில் வதம் ஆவது பற்றிக் கவலைப்படாமல் கம்சன் மேலும் கேசி என்னும் ஒரு அசுரனை அனுப்பினான். அவனும் குதிரை வடிவம் எடுத்து தன் குளம்பால் கண்ணனைக் கொல்ல வெகு வேகமாக ஓடி வந்தான். கண்ணன் அந்தக் குதிரையின் வாயைப் பிளந்து அவனையும் வதம் செய்தார் என்பதை "மாவாய்ப் பிளந்து" என்னும் பாசுர தொடரினால் பாடுகின்றார் ஆண்டாள்.


மல்லரை மாட்டியவன்:
மதுராவில் நடை பெறும் வில் விழாவிற்காக கண்ணனையும் பலராமரையும் வஞ்சனையாக அழைத்த கஞ்சன் அவர்கள் இருவரையும் கொல்ல சாணுரன், முஷ்டிகன் என்னும் மல்லர்களை ஏற்பாடு செய்திருந்தான். கண்ணன் அந்த மல்லர்களுடன் மல்யுத்தம் செய்து அனைவரையும் தோற்கடித்ததை ஆண்டாள் “மல்லரை மாட்டிய தேவாதி தேவனை" என்று பாடுகிறார்.

இப்பாசுரத்தின் உட்கருத்துகிழக்கு  வெளுப்பது என்பது  ஸத்வகுணம் தலையெடுப்பதற்கான அறிகுறி, எருமை சிறுவீடு மேய்வான் பரந்தன காண்.. தமோ குணங்கள் விலகிப்போவதாகக் கூறுவது

Labels: , , ,