Tuesday, January 01, 2008

திருப்பாவை #17

ஸ்ரீ:



அம்பரமே,தண்ணீரே சோறே அறஞ்செய்யும்
எம்பெருமான் நந்தகோ பாலா, எழுந்திராய்;
கொம்பனார்க் கெல்லாம் கொழுந்தே! குல விளக்கே!
எம்பெருமாட்டி! யசோதாய்! அறிவுறாய்
அம்பர மூடறுத் தோங்கி உலகளந்த
உம்பர்கோ மானே! உறங்காது எழுந்திராய்!
செம்பொற் கழலடி செல்வா! பலதேவா!
உம்பியும் நீயுன் உறங்கேலோ ரெம்பாவாய்!



பொருள்: உடுக்க நல் உடை, பருகும் நீர், உண்ணும் உணவு ஆகிய அனைத்தையும் எங்களுக்கு தாராளமாக அறமாக வழங்கும் எம்பெருமானே! கண்ணனின் தந்தையே! நந்தகோபாலா! எழுந்திரு.

வஞ்சிக்கொடிக் கொடி போன்ற ஆய் குலத்து பெண்கள் அனைவருக்கும் கொழுக் கொம்பாக விளக்கும் ஒளி விளக்கே! எம்பெருமாட்டியே யசோதையே! நீயும் துயில் எழாய்!

வாமனனாக வந்து வான் வெளியையும் கடந்து திரிவிக்கிரமனாக வளர்ந்து உலகத்தை தன் திருவடியால் அளந்த தேவதேவனே! கண்ண பெருமானே துயில் கொள்ளாமல் எழுந்திரு!

செம்பொன்னாலான வீரக்கழல்களை அணிந்த செல்வா! பலதேவா! நீயும் உனது தம்பியும் உறங்காதீர்கள்.


அம்பரமூடுறுத்து ஓங்கி உலகளந்தவன்:

வாமன அவதாரத்தின் பெருமையையே இப்பாசுரத்தில் "அம்பரம் ஊடறுத்து ஓங்கி உலகளந்த உம்பர் கோமானே" என்று பாடுகிறார் ஆண்டாள் நாச்சியார்.     (பார்க்க மூன்றாம் பாசுரம்  .http://andalthiruppavai.blogspot.in/2007/12/3.html )


Labels: , ,

0 Comments:

Post a Comment

<< Home