Monday, December 24, 2007

திருப்பாவை # 9

ஸ்ரீ:



தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரிய
தூபம் கமழ துயிலணை மேல் கண் வளரும்
மாமான் மகளே! மணிக்கதவம் தாள் திறவாய்
மாமீர்! அவளை யெழுப்பீரே? உன் மகள்தான்
ஊமையோ? அன்றி செவிடோ? அனந்தலோ?
ஏமப்பெருந்துயில் மந்திரப்பட்டாளோ?
மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று
நாமம் பலவும் நவின்றேலோ ரெம்பாவாய்! .........(9)


பொருள்:


தூய மாணிக்கக் கற்களால் அலங்கரிக்கப்பட்ட அழகிய மாடம் அதிலே சுற்றிலும் விளக்குகள் ஒளிர்கின்றன, அகில் முதலிய தூபம் மணக்கின்றன, சப்ர மஞ்ச கட்டிலில் ஒய்யாரமாக சாய்ந்து உறங்கும் மாமன் மகளே! எழுந்து வந்து கதவைத் திறடி கண்மணி!

(மாமன் மகள் இவ்வாறு எழுப்பபட்டும் அவள் எழவில்லை;ஆதலால் அவள் தாயை அழைத்து அவளை எழுப்பும்படி வேண்டுகின்றனர்)

மாமியே! உங்கள் மகள் எங்களுக்கு பதில் ஏதும் சொல்லாததால் அவள் என்ன ஊமையா? அல்லது செவிடா? ; ஓயாத உறக்கமா? அல்லது ஒழிவில்லாத ஆழ்ந்த உறக்கத்தில் மந்திரத்தினால் கட்டுப்பட்டு கிடக்கின்றாளா?


மாமாயனே! மதுசூதனே! மாதவனே! வைகுந்தனே என்று எம்பெருமானுடைய திருநாமங்கள் பலவற்றையும் கூறினோம், அந்தப் பெருமானைப் பார்க்கப் போகலாம் என்று சொல்லி எழுப்புங்களேன்.

மாயம் என்பதற்கு பொது அர்த்தம் பொய் என்பது ஆனால் வைஷ்ணவ சம்பிரதாயத்தில்  ஆச்சர்யம் என்று பெரியோர்கள் பொருள் கூறுவர். பக்தர்களை தனது சௌலபியத்தால் ஆச்சிரிசியப்படுத்துவதால் அவன் மாமாயன்.  

இப்பாசுரத்தின் உட்கருத்து: இங்கே சொல்லப்படும் தத்துவம் – கண்ணனை அடைவதான உயர்ந்த புருஷார்த்தத்தை இவர்களுக்கு புருஷகாரம் செய்து அருள அந்த கிருஷ்ணனுக்கு பிரியமான அந்த கோபிகையை பிடிக்கிறார்கள். அவளுடைய தாயாரையே ஆசார்யனாகக் கொண்டு அந்த கோபிகையை வேண்டுகிறார்கள். ஆக மோக்ஷ புருஷார்த்தத்தை அடைய புருஷகாரம் தேவை. அதற்கு ஆசார்ய அனுக்ரஹம் தேவை என்பது தேறும்.

இந்த பாசுரத்தில் பகவன் நாமாவிற்கு உள்ள மகிமை சொல்லபட்டு இருக்கிறது.பகவான் நாமத்துக்கு அவரை விட சக்தி அதிகமாம். திரௌபதியும் சரி,கஜேந்த்ரனும் சரி தங்களால் தங்களை காப்பற்றிக்கொள்ள முடியாது என்று தெரிந்தவுடன் அச்சுதா,அனந்தா,கோவிந்தா .சங்க சக்ர கதா பாணி என்றெல்லாம் அழைத்து பரிபூர்ண சரணாகதி அடைந்து விட்டார்கள்.அந்த க்ஷணமே அந்த நாமங்கள் காப்பாற்றினவாம்..அப்பேற்பட்ட சக்தி அவற்றுக்கு உண்டு. இங்கே மாமாயன் மாதவன் வைகுந்தன் என்று பல பேர்களால் சகஸ்ர நாமத்தினால் கூவி அழையுங்கள் என்கிறாள் ஆண்டாள்.
 

Labels: , , ,

0 Comments:

Post a Comment

<< Home