Sunday, December 30, 2007

திருப்பாவை #15

ஸ்ரீ:




எல்லே! இளங்கிளியே! இன்னமுறங்குதியோ?
சில்லென்றழையேன்மின்! நங்கைமீர்! போதர்கின்றேன்
வல்லையுன் கட்டுரைகள் பண்டேயுன் வாயறிதும்
வல்லீர்கள் நீங்களே நானேதானாயிடுக
ஒல்லைநீபோதாய் உனக்கென்ன வேறுடைமை
எல்லாரும் போந்தாரோ?போந்தாரை வந்தெண்ணிக்கொள்
வல்லானைக்கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை மாயனைப் பாடேலோ ரெம்பாவாய்.............(15)

பொருள்:
எழுப்புவோர்: ஏண்டி! கிளி போல் மிழற்றும் குமரியே! இன்னமும் உறங்குகின்றாயே!

எழாதிருப்பவள்: பெண்களே! 'சில்' என்று கத்தி கூப்பிடாதீர்கள்! இதோ வந்து விடுகின்றேன்.

எழுப்புவோர்:நீ மிகவும் கெட்டிக்காரி! பசப்பு வார்த்தைக்காரி! உன்னுடைய பேச்சுவன்மையை நாங்கள் முன்பே அறிந்திருக்கின்றோம்! உன் வாயையும் நாங்கள் அறிவோம்!

எழாதிருப்பவள்: கெட்டிக்காரிகள் நீங்களா? நானா? நானே ஆனாலும் சரி.

எழுப்புவோர்: சீக்கிரம் எழுந்து வா! இந்த கெட்டிக்காரத்தனத்தைத் தவிர வேறு என்ன வைத்திருக்கின்றாய்!

எழாதிருப்பவள்: நம் தோழியர்கள் அனைவரும் வந்து விட்டனரா?

எழுப்புவோர்:: வந்து விட்டார்கள்! சந்தேகம் இருந்தால் நீயே வந்து எண்ப் பார்த்துக் கொள்: குவாலயாபீடம் என்ற யானையை (வல்+யானை) கொன்ற கண்ணனை, பகைவரின் செருக்கை அழிக்க வல்லவனை(வல்லானை) மாயக்கண்ணனின் புகழைப் பாடலாம் சீக்கிரம் வாடி.

குவலாயாபீடம் என்னும் யானையைக் கொன்றவன்:

கம்சனால் வஞ்சனையாக மதுராவிற்கு வரவழைக்கப்பட்ட கிருஷ்ண பலராமர்கள். கம்சன் அரண்மனை நோக்கிச் செல்லுகையில், அவனது அரண்மணை வாயிலில் நிறுத்தி வைக்கப் பட்டிருந்த குவாலயாபீடம் என்னும் மதயானை கண்ணனைக் கொல்ல வந்தது. அந்த மாயன் மணிவண்ணன், ஊரார் அனைவரும் காணும் வகையில் அந்த யானையின் தந்தங்களை முறித்து, அதையே ஆயுதமாகக் கொண்டு யானையைக் கொன்றார். பகைவனது செருக்கையும் அழித்தார்.

இவ்வளவு ஆற்றல் படைத்தவன் நமக்கு எளியன் ஆனான். இதுவே அவன் மாயம். எனவே அந்த பரந்தாமனைப் பாடிக் கொண்டு பாவை நோன்பைக் கொண்டாடுவோம் என்று ஆயர் சிறுமியர் புறப்ப்டுகின்றார்கள் என்பதை,
"வல்லானை கொன்றானை" என்னும் பாசுர வரிகளில் புலப்படுத்தியுள்ளார் சூடிக் கொடுத்த சுடர்க் கொடியாள்.
கோவிந்தன்:
ஆநிரைகள் ஆயர்களின் செல்வமாக விளங்குபவை; அவற்றைக் கவர்ந்து செல்ல வரும் பகைவர்களை எதிர்த்து நின்று அவர் தம் வலிமையை அழிக்கின்ற கோவிந்தன் என்பதை கூடாரை வெல்லுஞ்சீர் கோவிந்தா என்றும் "மாற்றாரை மாற்றழிக்க வல்லானை" என்னும் இரண்டு பாடல்களில் உணர்த்தியுள்ளார் ஆண்டாள்.

Labels: , ,

0 Comments:

Post a Comment

<< Home